Monday, January 4, 2010
காகித ஆலைக் கழிவுகளால் மாசுபடும் ஏரிகள்: 1500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சி அருகே உள்ள தனியார் காகித தொழிற்சாலைகளின் கழிவுகளால் பூவலம்பேடு ஏரி, பெரிய புலியூர் ஏரிகள் மாசுபடுகின்றன. இதனால், சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கவலையில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் சுமார் 65 ஹெக்டேர் பரப்பளவிலான ஏரியை நம்பி சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அதே போல பூவலம்பேட்டை ஒட்டிய பெரியபுலியூர் ஊராட்சியில் 50 ஹெக்டேர் பரப்
பளவிலான ஏரியை நம்பி சுமார் 750 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இதனிடையே பூவலம்பேடு பகுதியை ஒட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தனியார் காகித ஆலையின் கழிவுகள் கிணறு, ஏரிகளில் கலப்பதாகக் கூறி, அதை எதிர்த்து பூவலம்பேடு மற்றும் பெரிய புலியூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இப் பகுதியில் கடந்த 5 மாதங்களாக செயல்பட்டுவரும் மற்றொரு காகித ஆலையின் கழிவுகள் பெரியபுலியூர் ஏரியில் கலப்பதால் அந்த ஏரியும் மாசுபட்டுள்ளது. மேலும், அந்த ஏரியின் உபரி நீர் பூவலம்பேடு ஏரியில் கலப்பதால் அந்த ஏரியும் மாசுபட்டுள்ளது.
இதுகுறித்து பூவலம்பேடு பகுதியை சேர்ந்த அசோகன் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக இந்த இரு ஆலைகளின் கழிவுகளால் மேற்கண்ட 2 ஏரிகளிலும் மாசு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து புகார் மனுக்கள் தமிழக முதலவர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.
பூவலம்பேடு ஊராட்சி துணைத் தலைவர் ரவிசங்கர் கூறியது: இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் கேட்ட போது, ஆலையில் தேக்கிவைக்கப்பட்டிருந்த கழிவு நீர் மழையின் காரணமாக வெளியேறி ஏரியை அடைந்து விட்டதாக தெரிவித்தனர் என்றார்.
பூவலம்பேடு பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேலு கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள ஏரிகளில் விரால், கட்லா உட்பட பல வகை மீன்களும், பெரிய வகை இறால்களும் இருந்தன. சுமார் 7 கிலோ எடையுள்ள மீன்கள் கூட மேற்கண்ட ஏரியில் இருந்த நிலையில், காகித ஆலைகளின் கழிவுகள் மேற்கண்ட ஏரியில் கலந்ததன் காரணமாக ஏரி நீர் மாசடைந்து மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதோடு, இறால் இனமும் அழிந்துள்ளது. மேலும், மீன்களின் தோலில் சொறி நோய் போல காணப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
1 ஏக்கருக்கு 30 மூட்டை நெல் விளைந்த இந்த பூமியில் கடந்த 2, 3 ஆண்டுகளாக 1 ஏக்கரில் 15 மூட்டை நெல் மட்டுமே விளைகிறது என்றும், நெல்பயிர் முளைத்த 15 நாளிலேயே சாயந்துவிடுகிறது என்றும் பச்சையப்பன் குற்றஞ்சாட்டினார்.
தனியார் தொழிற்சாலை அருகே விவசாயம் செய்து வரும் தேர்வாய் பகுதியை சேர்ந்த சீனிவாசனின் நிலத்தையொட்டி உள்ள கிணற்றின் அருகே ஆலை கழிவு தேக்கி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது தோட்டத்தில் இருந்த மாஞ்செடி, விவசாய பயிர் பாதிப்படைந்தது. முன்னர், குடிநீர் போல இருந்த கிணற்று நீர் தற்போது எந்தவித பயன்பாடும் இன்றி உள்ளது. இதுதொடர்பாக அந்த ஆலையின் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஆலைக் கழிவால் பாதிக்கப்பட்ட பெரியபுலியூர் பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆலைகளுக்கு சொந்தமான இடங்களில் கொட்டப்படும் கழிவுகள் மழை பெய்வதால் பெருக்கெடுக்கும் மழை நீரோடு சேர்ந்து ஏரிகளில் கலந்துவிடுவதாக பெரியபுலியூர் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment